செய்திகள்

இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக புதுக்கோட்டை நாட்டுப்படகு மீனவர்கள் 2 பேர் கைது

Published On 2017-01-12 03:54 GMT   |   Update On 2017-01-12 03:54 GMT
இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக புதுக்கோட்டை நாட்டுப்படகு மீனவர்கள் 2 பேரை யாழ்ப்பாணம் போலீசார் கைது செய்தனர்.
அறந்தாங்கி:

இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக புதுக்கோட்டை நாட்டுப்படகு மீனவர்கள் 2 பேரை யாழ்ப்பாணம் போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் உள்ளனர். அவர்கள் தினமும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மணமேல் குடி பகுதியை சேர்ந்த சக்தி வேல் (வயது 30) என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் அவரும், முனியகுமார் (28) என்பவரும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதற்கிடையே நடுக்கடலில் வைத்து அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களின் நாட்டுப்படகில் இறங்கி சோதனை போட்டனர். அப்போது அதில் 50 கிலோ கஞ்சா இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கடற் படையினர் யாழ்ப்பாணம் காங்கேசன் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காங்கேசன்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகலில் மீனவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக நாட்டுப்படகு மீனவர்கள் கைதாகி இருப்பது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News