செய்திகள்

வேதாரண்யம் அருகே கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது

Published On 2016-12-14 15:06 IST   |   Update On 2016-12-14 15:06:00 IST
வேதாரண்யம் அருகே கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (70). இவரது மனைவி முத்தம்மாள் (65). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ராமசாமி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். மகன் ராமசாமிக்கும், தந்தை சுப்பிரமணியனுக்கும் நிலம் பிரிப்பது சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 30.6.15-ம் தேதி முத்தம்மாள் கடைவீதிக்கு சென்று திரும்பும்போது மகன் ராமசாமி மற்றும் தியாகராஜன், ராஜேஷ், ராஜ்மோகன் ஆகிய நால்வரும் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்தம்மாளை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமி, தியாகராஜன், ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட ராஜ்மோகன் (39) தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் பழனிவேல் வேதாரண்யம் ராஜாஜிபூங்கா அருகே ரோந்து சென்ற அங்கு நின்றிருந்த ராஜ்மோகனை 20 மாதங்களுக்கு பிறகு நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

Similar News