கோபி அருகே கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
கோபி:
கோபி அருகே உள்ள பாரியூர் வெள்ளாள பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் ஆனந்தி (வயது 18).
இவர் அருகில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆனந்திக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லையாம்.
வயிற்று வலியால் அவதிபட்டு வந்த ஆனந்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இந்த நிலையில் அருகே உள்ள குலவிளக்கு பெருமாள் கோவில் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கோபி தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஆனந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.