செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பேராசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2016-09-21 13:05 IST   |   Update On 2016-09-21 13:05:00 IST
கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் ஈரோடு பேராசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மகளிர் கோர்ட்டில் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது
ஈரோடு:

ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் இவரது மகள் சாந்தினி (வயது 22). இவர் கவுந்தப்பாடி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 7-3-2011ம் தேதி சாந்தினி கல்லூரியில் சக மாணவிகளிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த கல்லூரியின் பேராசிரியர் பாலஅரசு(40) என்பவர் மாணவியை கன்னத்தில் அறைந்து புத்தக பையை அவர் முகத்தில் தூக்கி வீசினாராம்.

இதில் அவமானம் அடைந்த மாணவி சாந்தினி வீட்டுக்கு சென்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பேராசிரியர் பாலஅரசை கைது செய்தனர்.

இதுபற்றிய வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு மாணவியை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர் பாலஅரசுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த அபராதத் தொகையை மாணவியின் தாயாரிடம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக வக்கீல் சுமதி வாதாடினார்.

Similar News