செய்திகள்

ஈரோடு சோலாரில் வீட்டுக்கதவு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2016-09-19 16:27 IST   |   Update On 2016-09-19 16:27:00 IST
ஈரோடு சோலாரில் வீட்டுக்கதவு பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் சோலார் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொடக்குறிச்சி:

ஈரோடு அருகே உள்ள சோலார் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) அப்பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சாரதாமணி (47) இவர்கள் குடும்பத்துடன் பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலுக்கு போய் விட்டு அப்படியே பழனி கோவிலுக்கும் செல்ல புறப்பட்டு சென்றனர்.

நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் வீட்டுக்கு வந்த போது அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி மர்ம ஆசாமிகள் உள்ளே குதித்து உள்ளனர். பிறகு வீட்டின் கதவு பூட்டை அறுத்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

வீட்டின் பீரோவை பூட்டி அதன் சாவி பீரோ மேல் இருந்தது. அந்த சாவியை எடுத்த கொள்ளையர்கள் பீரோவை திறந்தனர்.

அதில் இருந்த செயின், பிரஸ்லட், தோடு என மொத்தம் 8 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரத்தையும் கொள்ளையடித்து விட்டு மர்ம ஆசாமிகள் தப்பி உள்ளனர்.

இந்த துணிகர நகை- பணம் கொள்ளை சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் சோலார் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News