செய்திகள்

வேலையை விட்டு நிறுத்தியதால் காரை திருடிய வாலிபர் கைது

Published On 2016-09-10 18:57 IST   |   Update On 2016-09-10 18:57:00 IST
ஸ்பின்னிங் மில்லில் வேலையை விட்டு நிறுத்தியதால் காரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு:

கர்நாடக மாநிலம் சிமோகா என்ற இடத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 32). இவர் இப்போது திருவண்ணாமலையில் உள்ள ஆதமங்களாபுரம் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

திருப்பூரில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த மஞ்சுநாத் பிறகு சிவகிரி செல்வநகரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த மில்லின் உரிமையாளருக்கு இவர் கார் ஓட்டி வந்தார். இந்தநிலையில் மஞ்சுநாத்தின் நடவடிக்கை அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் மஞ்சுநாத்தை அவர் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இதனால் மஞ்சுநாத் ஆத்திரம் அடைந்தார். இதை தொடர்ந்து அவர் மில்லின் உரிமையாளர் வீட்டுக்கு சென்றார். அங்கு போர்டிகோவில் நிறுத்தி இருந்த காரை திருடிய அவர் அதை திருவண்ணாமலைக்கு கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இது பற்றி சிவகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட காரையும் அதை திருடி சென்ற மஞ்சுநாத்தையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக காரை ஓட்டி சென்ற மஞ்சு நாத்தை போலீசார் மடக்கி பிடித்து கைதுசெய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட மஞ்சு நாத் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News