செய்திகள்

கோபி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

Published On 2016-09-08 17:11 IST   |   Update On 2016-09-08 17:11:00 IST
கோபி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து இன்று பஸ்களை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கோபி:

கோபி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து இன்று பஸ்களை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கோபி அருகே உள்ள கூகலூர் அடுத்த கொன்னமடையில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள 4 போர்களிலும் தண்ணீர் வரண்டு விட்டதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் போர்கள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

போர்கள் அமைக்காததை கண்டித்தும், குடிநீர் சீராக வழங்காததை கண்டித்தும் கொன்னமடையில் இன்று பெண்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பொதுமக்கள் வாகனங்கள் எதுவும் செல்லாதபடி கவுந்தபாடி- கோபி ரோட்டில் மரங்களையும் வெட்டி போட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 டவுண் பஸ்களையும் பெண்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடத்ததும் சம்பவ இடத்துக்கு கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை தலைமையில் போலீசார் விரைந்தனர். அவர்கள் சாலை மறியல் நடத்திய பெண்கள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News