உரிமம் இல்லாமல் உர விற்பனை செய்யக் கூடாது: கலெக்டர் எச்சரிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பயிர் சாகுபடியில் பெரும்பங்கு வகிக்கும் இராசயன உரங்கள் உர விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், தனியார் விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. உர உற்பத்தி மற்றும் உர விநியோகம் உரக்கட்டுப்பாடு ஆணை1985, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 மற்றும் உர நகர்வு ஆணை 1972-ஆகிய ஆணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி நிர்வகிக்கப்படுகிறது.
விற்பனை உரிமங்கள் மொத்த விற்பனை, சில்லரை விற்பனை இரு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. உர விற்பனை உரிமம் இல்லாத உர விற்பனை சட்டப்படி குற்றமாகும். உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து உரங்களைப் பெற்று சில்லரை விற்பனையளர்களுக்கு விற்பனை செய்வது மொத்த விற்பனையாகும். மொத்த விற்பனை உரிமம் பெற்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் நேரடியாக விவசாயிகளுக்கு விற்பனை செய்திட அனுமதி கிடையாது.மொத்த விற்பனையாளர்கள் அல்லது உர நிறுவனங்களிடமிருந்து உரங்களைப் பெற்று விவசாயிகளுக்கு விற்பனை செய்வது சில்லரை விற்பனையாகும். சில்லரை விற்பனை உரிமம் பெற்றவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இதர சில்லரை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு அனுமதி கிடையாது. விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
உர விற்பனை உரிமம் இல்லாமல் உரம் விற்பனை செய்யக் கூடாது. உர விற்பனை உரிமம் அனைவரது பார்வையில் தெளிவாக படும்படி விற்பனை நிலையத்தில் வைக்க வேண்டும்.ஒவ்வொரு உர விற்பனையாளரும் தங்களின் விற்பனை நிறுவனத்தின் உரங்களின் கொள்முதல் மற்றும் விற்பனை தொடர்பான மாதாந்திர அறிக்கையினை பிரதிமாதம் 20-ஆம் தேதிக்குள் தவறாது அனுப்பிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.