செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல்: வாலிபர் கைது

Published On 2016-05-09 07:38 IST   |   Update On 2016-05-09 07:38:00 IST
சென்னையில் இருந்து துபாய்க்கு ரூ.2 கோடி வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்ல முயன்ற வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலந்தூர் :

சென்னையில் இருந்து துபாய்க்கு ரூ.2 கோடி வெளிநாட்டு பணத்தை கடத்திச் செல்ல முயன்ற வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த மது (வயது 35) என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவரது கைப்பையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகள் இருந்தன. அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவர் அணிந்திருந்த உடையிலும், சூட்கேசிலும் மறைத்து வைத்து இருந்த ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

அவரிடம் இருந்து மொத்தம் ரூ.2 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மதுவின் விமான பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்.

அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அது ஹவாலா பணமா?, துபாய்க்கு கடத்திச் செல்லும்படி அந்த பணத்தை மதுவிடம் கொடுத்து அனுப்பியவர்கள் யார்? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பும் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

* கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஞானமூர்த்தி(50) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர்கள் திருடி சென்றனர்.

* கொரட்டூர் பகுதியில் பழைய வீட்டு சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்ட விசாகப்பட்டினத்தை சேர்ந்த அப்பாராவ்(33) மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்.

* ஆவடி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஆந்திராவை சேர்ந்த தனியன், ஈசாக் ஆகிய 2 சிறுவர்களை நேற்று ரெயில்வே போலீசார் மீட்டனர்.

* வில்லிவாக்கம் லோகோ பாலம் அருகே நேற்று காலை மின்சார ரெயில் மோதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பலியானார். அவர் யார்? என போலீசார் விசாரிக்கிறார்கள். 

Similar News