செய்திகள்

அரியலூர் அருகே தந்தையை வெட்டிக்கொன்ற கல்லூரி மாணவர்

Published On 2016-04-24 22:08 IST   |   Update On 2016-04-24 22:08:00 IST
அரியலூர் அருகே மது குடித்து சீட்டு பணத்தை செலவு செய்த தந்தையை கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:

அரியலூர் அருகே உள்ள  குறிச்சிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி அமுதா. இவர்களது மகன் பாரதிதாசன் (18). பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் ஓட்டல் மேனேஜ் மெண்ட் படித்து வந்தார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். அமுதா பல முறை கண்டித்தும் குடிப்பழக்கத்தை கை விடவில்லை.

இதனிடையே ஊரில் சீட்டு போட்டிருந்த ரவிச்சந்திரன், சீட்டு விழுந்ததையடுத்து அதில் கிடைத்த ரூ.5ஆயிரம் பணத்தையும் மது குடித்தே செலவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்றிரவு  அவருக்கும், அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், அமுதாவை சரமாரியாக திட்டி விட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டருகே உள்ள பாலத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு சென்ற பாரதிதாசன், தந்தை ரவிச்சந்திரனிடம் ஏன் சீட்டு பணத்தை மது குடித்து செலவு செய்தீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள்  வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. ஆத்திர மடைந்த ரவிச்சந்திரன் கீழே கிடந்த கல்லை எடுத்து பாரதிதாசனை தாக்கினார். பதிலுக்கு அவரும் கல்லால் ரவிச்சந்திரனை தாக்கினார். மோதல் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த  பாரதிதாசன் அரிவாளால் ரவிச்சந்திரனை வெட்டினார். இதில் அவரது தலையில் பலத்த  வெட்டுப்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த  வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும்  கயர்லாபாத்  போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாரதிதாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது குடித்து செலவு செய்த தந்தையை கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News