செய்திகள்

அரியலூர் அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்

Published On 2016-04-17 21:22 IST   |   Update On 2016-04-17 21:22:00 IST
அரியலூர் அருகே இன்று சொத்து தகராறில் தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கீழப்பளூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை (வயது 80), விவசாயி. இவரது மகன் முருகேசன்.

இந்த நிலையில் முருகேசன் தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் பிரித்து கொடுக்க மறுத்துள்ளார். இதனால் தந்தை –மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இன்று காலை பிச்சப்பிள்ளை அவரது வயலில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முருகேசன் , சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த அவர், தான் வைத்திருந்த அரிவாளால் பிச்சப்பிள்ளையை சரமாரி வெட்டினார்.

இதில் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காய மடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதையடுத்து முருகேசன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் கீழப்பளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

சொத்து தகராறில் தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News