உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

இளநீர் வியாபாரி கொலை வழக்கில் 2 பேர் கைது

Published On 2023-10-25 09:48 GMT   |   Update On 2023-10-25 09:48 GMT
  • ராஜாவை காணவில்லை என அவரின் உறவினர்கள் தேடி வந்தனர்.
  • திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் அருகே கொரடாச்சேரி எருக்காட்டூரை அடுத்த நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜா (வயது 50).

இவர் திருவாரூரில் இளநீர வியாபாரம் செய்து வந்தார்.

இவரது மனைவி விசாலாட்சி.

இவர்களுக்கு விஜய், விமல் என்ற இரண்டு மகன்களும், வினிதா என்ற மகளும் உள்ளனர்.

அதே ஊரைச் சேர்ந்த வீரமணி, தனது மனைவியுடன் ராஜாவுக்கு தகாத உறவு இருந்ததாக சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனால் ராஜா மீது வீரமணி கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு ராஜா மது அருந்திவிட்டு எருக்காட்டூர் வாய்க்கால் மதகு அருகில் நின்றுகொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த வீரமணி மற்றும் அவரது உறவினர் சரவணன் ஆகிய இருவரும் தகாத உறவு குறித்து ராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை ராஜா மறுத்தாலும் சந்தேகம் தீராத நிலையில், இருவரும் சேர்ந்து ராஜாவை அருகில் இருந்த வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி கொலை செய்து, வாய்க்கால் மதகின் உள்ளே வைத்து மறைத்துள்ளனர்.

ராஜாவை காணவில்லை என அவரின் உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் எருக்காட்டூர் வாய்க்கால் மதகு உட்புறம் ராஜாவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை தொடர்பாக வீரமணி மற்றும் சரவணன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தன் மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக கருதி கொலை செய்ததாக வீரமணியும், அவரது மைத்துனர் சரவணனும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் கொரடாச்சேரி போலீசார் வீரமணி (வயது 40), சரவணன் (வயது 30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

உடனடியாக குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டினார்.

கள்ளக்காதல் காரணமாக இளநீர் வியாபாரி தண்ணீரில் அமிக்கி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News