உள்ளூர் செய்திகள்

குனியமுத்தூரில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

Published On 2022-08-05 09:45 GMT   |   Update On 2022-08-05 09:45 GMT
  • கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை:

கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வலி நிவாரணி மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் சட்ட விரோதமாக சிலர் வாங்கி போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகரில் மட்டும் இதுவரை போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.தொடர்ந்து மாநகரில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குனியமுத்தூர் ஆசாத் நகரில் உள்ள மைதானத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு போைத மாத்திரை விற்பது உறுதியானது.

இதையடுத்து அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற கரும்புக்கடையை சேர்ந்த அசாருதீன்(வயது25), முகமது யாசர்(22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 22 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News