உள்ளூர் செய்திகள்

கோவையில் ஒரே இடத்தில் 17 ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2022-12-04 14:46 IST   |   Update On 2022-12-04 14:46:00 IST
  • மணமகன்கள் மணமகள்களின் கால்களில் மெட்டி அணிவித்தனர்.
  • அனைவருக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேஸ்திரி, வடை வழங்கப்பட்டது.

கோவை

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 217 ஏழை ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் நடைபெற்றது.

சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விழாவுக்கு தலைைம தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக கோவையிலும் திருமணம் நடைபெற்றது. கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 17 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமை தாங்கினார்.

திருமணவிழாவில் மணமக்கள் 17 ஜோடிகளும் மாநகராட்சி கலையரங்க மேடையில் மாலை அணிவித்து அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து அய்யர்கள் வேதமந்திரங்கள் ஒதி மணமகன்களிடம் தாலியை எடுத்து கொடுக்க, மணமகன்கள், மணமகள்களின் கழுத்தில் தாலியை கட்டினர்.

அப்போது விழாவில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்பட அனைவரும் அட்சதை தூவி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், மணமகன்கள் மணமகள்களின் கால்களில் மெட்டி அணிவித்தனர்.

திருமண விழாவில் பங்கேற்ற 17 திருமண ஜோடிகளுக்கும் தாய் வீட்டு சீதனமாக பீரோ, கட்டில், தலையணை, மெத்தை, வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டது.

இதில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், கேஸ்திரி, வடை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News