உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே இரும்புக்கடை உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2023-10-20 14:12 IST   |   Update On 2023-10-20 14:12:00 IST
  • கடந்த ஜூன் மாதம் யுசூப்ஷா மனைவியுடன் மகள்களை பார்ப்பதற்காக துபாய் நாட்டிற்கு சென்றார்.
  • கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் யுசூப்ஷா (வயது 54). இவர் அந்த பகுதியில் இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் யுசூப்ஷா தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் மகள்களை பார்ப்பதற்காக துபாய் நாட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், வளையல், மோதிரம் உள்பட 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த யுசூப்ஷாவின் உறவினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதனை வைத்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்புக்கடை உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகைகளை கொள்ளை யடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News