கோவை தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 13 பவுன் நகைகள்- பணம் கொள்ளை
- மோகன்குமாரின் வீட்டின் ஜன்னல் வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
- இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு மோகன்குமார் தகவல் தெரிவித்தார்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று மதியம் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வேலைக்கு சென்றார்.
அப்போது மோகன்குமாரின் வீட்டின் ஜன்னல் வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வளையல், கம்மல் உள்பட 13 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ. 2 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
மாலையில் வேலை முடிந்த தும் வீட்டிற்கு திரும்பிய மோகன்குமார் வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பட்டப்பகலில் 13 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.