நீலகிரியில் மழையால் 100 ஏக்கர் பரப்பளவில் கேரட் பயிர் நாசம்
- மழையால் கேரட் பயிரிகள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது.
- அழுகிய கேரட் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். அழுகிய கேரட் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊட்டி, ஜூன்.8-
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
அதன்படி மாவட்டத்தில் 5 ஆயிரம் எக்டேருக்கு அதிகமான பரப்பளவில காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பூண்டு போன்ற பயிர்களும், கூடலூர் பகுதியில் இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களும் பயிரிடப்பட்டு வருகிறது.
இதில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கேத்தி, எம்.பாலாடா மற்றும் கோத்தகிரி உள்ளிட இடங்களில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான மழை பெய்து வருகிறது. இதனால் கேரட் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மழையால் நிலத்தில் சூடு அதிகமாகி கேரட் அழுகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மழையால் அழுகி நாசமான கேரட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தோட்டக்கலைத்துறை அதிகாரியிடம் கேட்டபோது 100 ஏக்கர் பரப்பளவில் கேரட் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சற்று மழை குறைந்துள்ளதால் இறுதிக்கட்ட கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.