செய்திகள்
கடலூரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

கடலூரில் வேனில் நின்றபடி பிரசாரம் செய்த விஜயகாந்த்

Published On 2021-04-04 00:47 GMT   |   Update On 2021-04-04 00:47 GMT
கடலூரில் தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று கடலூரில் வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்டார்.
கடலூர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை)நிறைவடைகிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை தே.மு.தி.க. சந்தித்து வருகிறது. இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், நேற்று 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் அவர் பிரசாரத்தை மேற்கொண்டார். அதன்படி, கடலூர் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானபண்டிதன், குறிஞ்சிப்பாடி தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோரை ஆதரித்து நேற்று விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

மாலையில் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பகுதிக்கு பிரசார வேனில் வந்த அவர், அங்கு திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார். அப்போது அவர் வேனில் நின்றபடி கை கூப்பியும், முரசு சின்னத்தை காட்டியும் ஓட்டு கேட்டார்.

முன்னதாக தொண்டர்கள் அவருக்கு பட்டாசு வெடித்து ஆரவாரமாக வரவேற்பு கொடுத்தனர். இதில் அ.ம.மு.க., தே.மு.தி.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதன்பிறகு அவர் பண்ருட்டிக்கு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News