செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2021-03-19 08:45 GMT   |   Update On 2021-03-19 11:41 GMT
தாழ்வான பகுதிகளை மேம்படுத்த ரூ.230 கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கடலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கடலூர்:

கடலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சம்பத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

தமிழக மக்கள் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிம்மதியை தி.மு.க. கெடுக்க பார்க்கிறது. இந்த தேர்தல் என்பது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மு.க.ஸ்டாலின் இந்த அரசை குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த அரசு செயல்படவில்லை என்று கூறுகிறார். மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை அவர் எதையும் சிந்தித்து பேசுவதில்லை.

இனி தமிழக மக்கள் அரசிடம் எந்த புகார் மனுவும் கொடுக்க வேண்டியதில்லை. 1100 போன் எண்ணில் தொடர்பு கொண்டு கூறினாலே அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

கடலூர் நகரம் இனி வெள்ளத்தால் பாதிக்கப்படாது. தாழ்வான பகுதிகளை மேம்படுத்த ரூ.230 கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இனி மின் தடையும் இங்கு ஏற்படாது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Tags:    

Similar News