செய்திகள்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: ஜி.கே. வாசன்

Published On 2017-05-19 15:09 IST   |   Update On 2017-05-19 15:09:00 IST
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலுக்கு த.மா.கா. தயாராகி வருகிறது. நான் கடந்த 2 மாதமாக 32 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருகிறேன். த.மா.கா. உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? த.மா.கா.வின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை பற்றி ஆராய்ந்தேன்.

உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.எஸ். அணியுடன் கூட்டணி தொடரும். அ.தி.மு.க. கூட்டுக் குடும்பமாக இருப்பதை த.மா.கா. விரும்புகிறது.

மத்திய அரசு கிராமப்புற மக்களுக்கு துணை நிற்கவில்லை. விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வறட்சியினால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


அவர்கள் விவசாய கடன்களுக்காக நெருக்கப்படுகிறார்கள். எனவே அவர்களது அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்து ஜி.கே.வாசன், ‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். ரஜினிகாந்த் மக்கள் மன நிலையை நன்கு புரிந்தவர். எனவே அவர் சரியான முடிவை எடுப்பார்’’ என்றார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், இளைஞரணி தலைவர் யுவராஜா, விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News