லைஃப்ஸ்டைல்
மாடியில் எளிய முறையில் காய்கறி தோட்டம்

மாடியில் எளிய முறையில் காய்கறி தோட்டம்

Published On 2019-07-18 03:27 GMT   |   Update On 2019-07-18 03:27 GMT
பெண்கள் வீட்டில் இருக்கும் மொட்டை மாடி பகுதிகளில் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடலாம். இந்த காய்கறிகளை பறித்து அன்றாட உணவுக்கு பயன்படுத்தலாம்.
பூச்சி மருந்துகள் தெளிக்காத, செயற்கை உரமிடாத காய்கறிகளை உற்பத்தி செய்ய மாடித்தோட்டம் உதவுகிறது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது விவசாயத்தில் முக்கியமானது என்பதால் இந்த காலம் வீட்டு மாடித் தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற காலமாகும்.

இது போன்ற நிலையில், வீட்டில் இருக்கும் மொட்டை மாடி பகுதிகளில் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடலாம். இந்த காய்கறிகளை பறித்து அன்றாட உணவுக்கு பயன்படுத்தலாம்.

மாடி தோட்டம்

மாடி தோட்டத்தில் தொட்டிகளில் செடிகளை வளர்க்கும் முறையில் 4-க்கு 4 அடி தொட்டிகள் அமைத்தோ அல்லது சிறிய தொட்டிகளிலோ அல்லது கெட்டியான பாலிதீன் அல்லது தார்பாலின் பைகளிலோ செடிகளை வளர்க்கலாம்.

தொட்டிகளில் மண்ணை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மண் பயன்படுத்தும் போது எடை அதிகரிக்கும். இந்த தொட்டிகளில் தண்ணீர் ஊற்றும்போது மேலும் எடை கூடும். இந்த எடையை மாடியின் தளம் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறதா என்பதை அறிந்து மண் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக, மாடி தோட்ட தொட்டிகளில் மண்ணுக்கு பதிலாக மக்கிய தென்னை நார்க்கழிவு, மண் புழு உரம், தொழுஉரம், உயிர் உரங்களை கலந்து பயன்படுத்தலாம். இதில் மிகச்சிறிதளவு மண் கலக்கலாம். இது மிகவும் எடை குறைவாக இருப்பதுடன், வேர்களுக்கு எளிதில் தண்ணீர் கிடைப்பதுடன், தேவையற்ற அதிகமுள்ள நீரை எளிதில் வடியவும் செய்துவிடும். இந்த தொட்டிகளில் தண்ணீர் வடிய தொட்டியின் அடியில் இருந்து அரை அங்குலத்திற்கு மேல் சிறு துவாரம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

செடி தேர்வு

மாடித் தோட்டத்தில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை தேர்வு செய்து பயிரிட வேண்டும். தக்காளி, வெண்டை, கத்திரி, பாகற்காய், பீன்ஸ், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், கீரை வகை உள்ளிட்ட காய்கறி செடிகளை வளர்க்கலாம். பூச்செடிகளை வளர்க்க விரும்புவோர் ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி, சாமந்தி மற்றும் அழகு செடிகளான கோலியஸ், குளோரபைட்டம், டிரசீனா, ரேடோடென்ட்ரான், ரங்கூன் கிரீப்பர், டெசர்ட் ரோஸ் ஆகியவற்றை வளர்க்கலாம்.

மாடி தோட்டத்தில் மூலிகை செடிகளையும் பலர் விரும்பி வளர்க்கிறார்கள். அந்த வகையில், வல்லாரை, துளசி, கற்றாழை, கரிசலாங்கண்ணி, ஆடாதோடை போன்றவற்றை வளர்க் கலாம்.

பயிர் பாதுகாப்பு

மாடி தோட்ட செடிகளை பயிரிட, நோய் எதிர்ப்பு திறன் உள்ள விதைகளை வாங்கி பயிர் செய்வது நல்லது. குறிப்பாக, வெண்டையில் அர்கா அமனாமிகா, வர்ஷா ரகங்களை பயிரிடலாம். செடிகளில் புழுக்கள் தென்பட்டால் முடிந்தவரை கையால் பொறுக்கி எடுத்து அழிக்கவும். இந்த புழுக்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு, வேப்பெண்ணெய் மற்றும் புண்ணாக்கு சாறு உபயோகிக்கலாம். வேறு வழியின்றி ரசாயன உரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால் மருந்து தெளித்து பத்து நாட்கள் வரை காய்களை பறிக்கக்கூடாது. பூஞ்சாண நோய்கள் தென்பட்டால் தகுந்த பூஞ்சாண கொல்லி மருந்தை தெளிக்கவும். பின்னர் மாடித்தோட்டத்தில் சுழற்சி முறையில் சீசனில் முதிரும் காய்கறிகளை பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த தகவலை மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News