லைஃப்ஸ்டைல்

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இனியாவது நிறைவேறுமா?

Published On 2019-05-31 08:44 GMT   |   Update On 2019-05-31 08:44 GMT
அனைத்து இடங்களிலும் தங்கள் தடத்தை பதித்த பெண்களால் மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் மட்டும் உரிய பிரதிநிதித்துவத்தை பெறமுடியவில்லை.
கல்வியில், வேலைவாய்ப்பில் பெண்கள் நிறைய முன்னேறிவிட்டார்கள். பிளஸ்-2 தேர்வை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் மாணவர்களைவிட, மாணவிகளே அதிகம் தேறி வருகிறார்கள். சிவில் சர்வீசஸ் தேர்வில்கூட இப்போதெல்லாம் கணிசமான அளவு தேர்ந்தெடுக்கப்பட்டு, நாடு முழுவதும் அகில இந்திய பணிகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்து இடங்களிலும் தங்கள் தடத்தை பதித்த பெண்களால் மாநில சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் மட்டும் உரிய பிரதிநிதித்துவத்தை பெறமுடியவில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற மசோதாவை தேவகவுடா 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பிறகு ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், அரசில் அனைத்து மட்டங்களிலும் பெண்கள் நலனுக்கும், மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசியல் சட்டத்திருத்தம் மூலமாக நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியோடு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவேண்டும் என்ற முயற்சியை பெண்கள் மேற்கொண்டால் நடக்கும். பெண்கள் பிரச்சினை, குழந்தைகள் நலன் தொடர்பாக பெண்கள்தான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும்.

பெண் உரிமைக்காக முழக்கமிடும் அரசியல் கட்சிகள்கூட தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களில் பெண்களுக்கு அதிக இடங்கள் கொடுப்பதில்லை. முதல் நாடாளுமன்றத்தில் 24 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் 66 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். தற்போது நடந்த 17-வது நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

222 பெண்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். இதில் 78 பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14.4 சதவீதமாகும். 33 சதவீதம் எங்கே இருக்கிறது?, 14.4 சதவீதம் எங்கே இருக்கிறது? என்று விமர்சனங்கள் வருகின்றன. ஆனாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல, இந்த 78 பேரும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 27 பெண்கள் மீண்டும் எம்.பி.க்களாகி இருக்கிறார்கள்.

மீதமுள்ள நிறைய பெண்கள் படித்தவர்கள், நாட்டு நிலைமையை நன்றாக தெரிந்தவர்கள். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி ஏற்கனவே நாடாளுமன்ற அனுபவம் கொண்டவர். தமிழச்சி தங்கபாண்டியன் ஆங்கில பேராசிரியையாக இருந்தவர். இருவருமே நல்ல எழுத்தாளர்கள், பேச்சாற்றல் கொண்டவர்கள். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஜோதிமணியும் நல்ல சமூக சிந்தனையாளர், பேச்சாற்றல் மிக்கவர்.

எனவே தமிழகத்தின் சார்பிலும் இந்த மூவரின் குரலும் ஓங்கி ஒலிக்கும். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற முயற்சியை தமிழக பெண் எம்.பி.க்கள் தொடங்கவேண்டும். 78 பெண் எம்.பி.க்களும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்குபெறும் பாங்கு மிகுந்த பலனை அளிக்கப்போகிறது. இந்தமுறை பெண்கள் இடஒதுக்கீட்டிற்காக இந்த 78 பேரும் ஒலிக்கப்போகும் குரல் நாடாளுமன்றத்தை அதிர வைக்கப்போகிறது.
Tags:    

Similar News