லைஃப்ஸ்டைல்

வலைத்தள பாலியல்.. வலைவீசும் போலிகள்..

Published On 2018-12-10 09:05 GMT   |   Update On 2018-12-10 09:05 GMT
வலைத்தள பாலியல் வியாபார மோகத்தில் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். ஆண்களும், பெண்களும் விழிப்போடும், ஒழுக்கத்தோடும் இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் நல்லது!
திருமணத்திற்கு பிறகுகூட இலைமறைவு காயாக அனுமதிக்கப்பட்ட பாலியல் உறவு, வெளிப்படையாக மார்க்கெட்டிற்கு வந்துவிட்ட பிறகு அதன் விலையும் உயர்ந்துவிட்டது. பொது இடங்களில் மற்றவர்களிடம் இதைப்பற்றி பேசவே தயங்கும் தலைமுறைகள் இன்று இல்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக திகட்ட திகட்ட எல்லாமுமே வலைத்தளங்களில் கிடைத்துவிடுகிறது. அவைகள் சமூகத்தில் ஏற்படுத்திய மோசமான விளைவுகளால் திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு என்பது சாதாரண விஷயமாகிவிட்டது.

சமூக வலைத்தளத்திற்கு அடிமையாகியிருக்கும் இளைஞர்கள் பற்றி எடுக்கப்பட்ட சர்வே, ‘22-ல் இருந்து 34 வயது வரையிலான இளைஞர்கள் அதுவே கதியென்று கிடக்க பாலியல் விஷயங்களே காரணமாக இருக்கின்றன’ என்று குறிப்பிடுகிறது. அவர்களின் மாத வருமானத்தில் 30 சதவீதம் இதற்கே செலவாகிவிடுகிறது. இதில் பல ஏமாற்று வேலைகளும் நடக்கிறது.

எந்த ஓட்டல் உணவு தேவைப்படுகிறதோ அதை ஆன்லைனில் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம். அதன் மூலம் வீட்டில் இருந்தே விரும்பிய சுவையை ருசிக்கலாம். அதுபோல், ‘போட்டோவை பாருங்கள்.. தேவையை சொல்லுங்கள்.. வீட்டிற்கே அனுப்பிவைக்கிறோம்’ என்று சொல்லும் அளவுக்கு ஆன்லைன் ‘வியாபாரம்’ அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இ்ந்த வியாபாரத்திற்கான விளம்பரங்களிலும் புதிய யுக்திகளை கையாளுகிறார்கள். அவர்களாகவே வயதுக்குதக்கபடி பெண்களை வகைப் படுத்திக்கொள்கிறார்கள். கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள், அலுவலகம் செல்வோர் என்று தனித்தனியாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமாக கட்டணம் நிர்ணயித்து வலைத் தளங்களில் பகிரங்கமாகவே விளம்பரம் செய்கிறார்கள்.

இத்தகைய விளம்பரங்களை பார்த்து, தங்களது பாலியல் செயல்பாடுகளை ரகசியமாக தொடர விரும்பும் இளைஞர்கள் பல்வேறு விதமான ஆபத்துக்களை இதில் சந்திக்கிறார்கள். ஏராளமான பொருள் இழப்புகளும், மன அழுத்தங்களும், குற்ற உணர்வுகளும் ஏற்படுகின்றன. ‘பிளாக்மெயில்’ செய்யப்படும் சிக்கல்களும் உண்டு.

மனிதர்களில் வெளிப்படைத்தன்மை கொண்டவர்கள், ரகசியத்தன்மை கொண்டவர்கள் என்று இருவகையினர் உண்டு. வெளிப்படைத்தன்மை கொண்டவர்கள் எதையும் நேருக்கு நேர் சந்திக்க விரும்புவார்கள். பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளிக்கலாம் என்ற தன்னம்பிக்கை அவர்களிடம் அதிகம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பாலியல் வேட்கை விஷயத்திலும் நேரடியான அணுகு முறையை கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் சேர்ந்து செல்வார்கள். வெளிப்படையாக அதை பற்றி நண்பர்களிடம் பேசவும் செய்வார்கள்.



இரண்டாவது வகையான ரகசியத்தன்மை கொண்டவர்கள் எல்லாவற்றையும் மறைமுகமாகவே நடத்த விரும்புவார்கள். இவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதையோ, இவர்கள் பெண்கள் விஷயத்தில் எத்தகைய குணாதிசயங்களை கொண்டவர்கள் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. தங்களது அத்தனை செயல்பாடுகளிலும் ரகசியம் காக்கும் இவர்கள், பாலியல் வேட்கை விஷயத்தில் மர்மமாக நடந்துகொள்வார்கள். இப்படிப்பட்டவர்களே சமூக வலைத்தளம் தொடர்பான பாலியல் செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவைகளில் ஏமாறுவது, ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவெடுப்பது போன்றவைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

‘எல்லாம் வலைத் தளமயம்’ என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மரபுரீதியான பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள், தங்கள் தொழில் நசிந்துபோய்விட்டதாக புலம்புகிறார்கள். ‘சந்தைக்கு வராமலே நேரடியாக கொள்முதல் நடந்துவிடுகிறது’ என்று புலம்புகிறார்கள். இ்ன்னொருபுறத்தில் இவர்களை நம்பி வாழ்ந்த இடைத்தரகர்கள் கூட்டமும், ‘வேலைவாய்ப்பு பறிபோய்விட்டதாக’ சொல்கிறது.

இளைஞர்கள் வலைத்தள பாலியலை பாதுகாப்பாக நினைக்கிறார்கள். ஆனால் பெருமளவு பணத்தை அதில் இழந்துகொண்டிருக்கிறார்கள். இழப்புகளை அவர்களால் வெளியில் சொல்லமுடிவதில்லை. விளம்பரத்தின் மூலம் அவர்கள் ஏமாறும்போது, விளம்பரம் செய்தவர்கள் யார் என்றே தெரிந்து கொள்ள முடிவதில்லை. மர்மமானவர்களுக்காக தங்கள் மாதச் சம்பளங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள்.

வீடியோ சாட், செல்போன் சாட் மூலம் பணத்தை இழப்பதோடு, அவர்களது பாலியல் எண்ணங்களும் பாதை மாறி சென்றுகொண்டிருக்கிறது. இணைய பக்கங்களில் "பேச விருப்பமா" என்று ஒரு அழகான பெண் படத்தைப் போட்டு விளம்பரம் செய்திருப்பார்கள். சரி பேசித்தான் பார்ப்போமே என்று பேச ஆரம்பித்துவிட்டால், மணிக்கணக்கில் பேசி பணத்தை இழக்கவேண்டியதிருக்கும். வலைத் தளத்தில் வலைவீசுபவர்களில் பெரும்பாலானவர்கள் போலியானவர்களே!

இந்த வலைத்தள பாலியல் வியாபார மோகத்தில் பாதிக்கப்படுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும்தான். வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பெண்களை ஆசைகாட்டி இந்த தொழிலுக்கு அழைத்துவந்து அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலும் வெகு நீளமாகவே இருக்கிறது. ஆண்களும், பெண்களும் விழிப்போடும், ஒழுக்கத்தோடும் இருந்தால் அவர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் நல்லது!
Tags:    

Similar News