லைஃப்ஸ்டைல்
வளைகாப்பு விழா

பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்துவது ஏன்?

Published On 2021-11-12 08:00 GMT   |   Update On 2021-11-12 08:00 GMT
உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.
முதல் குழந்தையை பெற்றேடுக்க போகும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பாக வளைகாப்பு எனும் சடங்கை பாரம்பரியமாக செய்து வருகிறோம். இதன் பின்னணியில் பல நன்மைகள் இருக்கின்றன. அவை குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள்

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழும். வாந்தி, மயக்கம், ஒவ்வாமை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகளும் இத்தகைய உடல் மாற்றங்களை கண்டு குழப்பம், பிரசவம் பற்றிய அச்சம் போன்ற மனநல பிரச்சனைகளும் ஏற்படும். இந்த நேரத்தில்  பெரும்பாலான கர்ப்பிணிகள் வாய்க்கு ருசியாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் குமட்டல் உணர்வு காரணமாக சாப்பிட முடியாது. அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி ஏற்பட்டு அவர்களை சிரமப்படுத்தும்.

வளைகாப்பு வைபவம்

கருவுற்ற ஏழாவது மாதத்தில் உறவினர்களும், நண்பர்களும் பெண்ணின் புகுந்த வீட்டுக்கு வந்து வளைகாப்பு செய்வார்கள். கருவுற்ற பெண்ணுக்கு தாய்மார்கள் ஒவ்வொருவராக நலங்கு வைத்து கணணாடி வளையல்களை அணிவித்து ஆரத்தி எடுத்து அட்சதை தூவுவார்கள்.

கர்ப்பிணியின் மணிக்கட்டு முதல் முழங்கை வரை வண்ணமயமான வளையல்கள் நிறைந்திருக்கும். சுற்றமும்-நட்பும் சூழ அந்த பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து செல்வார்கள்.

தலைப்பிரசவம் பெண்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும். பிரசவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற கவலையும் பயமும் இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் கூடி வந்து உன்னை பத்திரமாக பார்த்து கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நிகழ்வாக வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது.

கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் வாந்தி பிரச்சனை ஏழாவது மாதத்திற்குள் பெரும்பாலும் நின்று விடும். வளைகாப்பு சமயத்தில் அவர்களுக்கு வாய்க்கு ருசியான புளி, எலுமிச்சை, போன்ற சோறு வகைகளையும், இனிப்பு காரம் போன்ற தின்பண்டங்களையும் தாய் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்து கொடுப்பார்கள். கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை ஆசை தீர சாப்பிடுவார்கள்.

கண்ணாடி வளையல்கள் குலுங்கும் சத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தையால் நன்றாக கேட்க முடியும். அந்த சத்தம் தாயையும், சேயையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள உதவும்.

மேலும் ஏழாம் மாதத்தற்கு மேல் தம்பதிகளுக்கிடையே தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். அதற்காகவே எளிதில் உடையக்கூடிய கண்ணாடி வளையல்களை அணிவிப்பார்கள். இதன் மூலம் கணவன் தன்னை பார்க்க வரும் நாளில் கூட அப்பெண் பாதுகாப்பாக நடந்து கொள்வதற்கு அந்த வளையல்களே காப்பாக அமையும்.

ஒவ்வொரு பெண்ணும் கருவுற்ற காலத்தில் நம்மையும் நம் தாய் இப்படித்தான் தாங்கியிருப்பாள்? என்று நினைத்து தாயின் மீது அதிக பாசம் கொள்வார்கள். தாயின் அருகில் இருப்பதை பாதுகாப்பாக உணர்வார்கள். எனவே தான் தலைப்பிரசவத்தை தாய் வீட்டில் வைப்பது வழக்கமாக உள்ளது.
Tags:    

Similar News