லைஃப்ஸ்டைல்
பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்ட பின்பு...?

பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்ட பின்பு...?

Published On 2019-07-12 07:44 GMT   |   Update On 2019-07-12 07:44 GMT
நீங்கள் சாப்பிடும் சில பொருட்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய் நாற்றத்தை சரிசெய்யும். எந்தெந்த பொருட்கள் உங்கள் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்தும் என்பதை இங்கு பார்க்கலாம்.
பழங்காலம் முதலே நம் உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களில் முக்கியமானவை பூண்டு மற்றும் வெங்காயம். இந்த இரண்டு பொருட்களும் சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை, அதிக அளவு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இவை எவ்வளவுதான் ஆரோக்கியமான பொருளாக இருந்தாலும் அவற்றை பச்சையாக உண்டால், வாயில் நாற்றம் ஏற்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுடன் பேசும்போது அது அவர்களுக்கு மட்டுமன்றி உங்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் நீங்கள் சாப்பிடும் சில பொருட்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய் நாற்றத்தை சரிசெய்யும். எந்தெந்த பொருட்கள் உங்கள் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்தும் என்பதை இங்கு பார்க்கலாம்.

ஆய்வுகளின்படி பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சில வேதிப்பொருட்கள்தான் வாயில் நாற்றத்தை உண்டாக்குகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவற்றில் உள்ள அல்லிசின், மெதில் சல்பைட் மற்றும் சிஸ்டைன் சல்பாக்சைடு போன்ற வேதிப்பொருட்கள் ஆகும். மெதில் சல்பைட் பூண்டு மற்றும் வெங்காயத்தை வெட்டும்போது வெளியேறுகிறது. இவற்றை சாப்பிடும்போது இதில் உள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்து வாய் நாற்றத்தை ஏற்படுத்துகிறது.



ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் நாற்றத்தை பாலானது சரிசெய்யும் என்று கூறுகிறார்கள். சாப்பிட்டு முடித்த பின் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை உடனடியாக குறைக்கும். சாப்பிட்டு முடிப்பதற்கும், பால் குடிப்பதற்கும் இடையில் குறைந்தது 15 முதல் 20 நிமிடம் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.

பல் மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவெனில் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஏனெனில் ஆப்பிளில் உள்ள இயற்கை என்சைம்கள், பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சல்பரின் வீரியத்தை குறைக்கும். இதனால் உங்களுக்கு கிடைப்பது துர்நாற்றமில்லாத நறுமண வாசனையாகும். எனவே சாப்பிட்டு முடித்தபின் ஒரு ஆப்பிளோ அல்லது ஆப்பிள் ஜூசோ குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாசனையை போக்க இதுதான் மிகவும் எளிமையான அதே சமயம் உபயோகமான வழி ஆகும். வெதுவெதுப்பான நீரை, உணவு சாப்பிட்டப்பின் குடிப்பது உங்கள் வாயை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதுடன் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் பயன்படுகிறது.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆன்டி பாக்டீரியால் பண்புகள் ஒரு சிறந்த இயற்கை நிவாரணி ஆகும். இது பூண்டு மற்றும் வெங்காயத்தினால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை விரட்டுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எலுமிச்சை சாறுடன் சூடான நீரை அதில் கலந்து 3 முதல் 4 முறை வாய் கொப்பளிக்கவும். இது வாய் துர்நாற்றத்தை விரட்டும்.
Tags:    

Similar News