பெண்கள் உலகம்

களைப்பு வருவது ஏன்?

Published On 2019-04-24 08:43 IST   |   Update On 2019-04-24 08:43:00 IST
கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன.
மனிதர்கள் ஏன் அடிக்கடி களைப்படைகிறார்கள் என்பதற்கு ஜேன் பிராடி என்ற மருத்துவ அறிஞர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன.

ஜலதோஷம், நீரிழிவு, புற்றுநோய் இவற்றின் அறிகுறி இருந்தாலும், அவை உடலை களைப்படையச் செய்துவிடும். உணர்ச்சி வசப்படுவதாலும், மனத்தளர்ச்சியினாலும் அதிகமான எதிர்பார்ப்புகளாலும் களைப்பு ஏற்படுவது உண்டு. அவசரமாக உண்பதாலோ, சரிவர உண்ணாமல் இருப்பதாலோ உடலில் சர்க்கரை சத்துக்குறைவு ஏற்பட்டு களைப்பு உண்டாகிறது. அதிகமான உடற்பயிற்சி, குறைந்த உறக்கம் போன்றவையும் களைப்பின் காரணங்களாகும்.

மிகச் சமீபத்தில் மற்றொரு ஆச்சரியமான கண்டுபிடிப்பும் வெளிவந்துள்ளது. குறைப்பிரசவத்தில் அதாவது ஏழு, எட்டு மாதங்களில் பிறந்தவர்கள் வெகு எளிதில் களைப்படைந்து விடுவார்களாம். இது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் கசப்பான சேதி. ஆனாலும் அதுதான் நிஜம். அடிக்கடி களைப்பு, தொண்டைக் கமறல், கண் எரிச்சல், உடலில் சோர்வு, லேசான நடுக்கம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் சொட்டுதல் போன்றவை நமக்கு ஏற்பட்டால் அது அழையா விருந்தாளியான ஜலதோஷத்தைக் குறிக்கிறது. ஜலதோஷத்தால் பாதித்த ஒருவருக்கு எளிதாக பிற பெரிய நோய்களும் தாக்கக்கூடும்.

ஆகவே, இந்த தொல்லை தரும் ஜலதோஷத்தை தடுப்பது எப்படி? இதற்கு மிகச் சரியான மருந்து ஒருவகை அமிலம்தான். இதன் பெயர் அஸ்கார்பிக் அமிலம் ஆகும். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இந்த அமிலம் 80 மில்லி கிராமும், தாய்மார்களுக்கு 100 மில்லி கிராமும் தேவைப்படுகிறது. இந்த அளவு குறைந்தால் நோய்கள் மிக எளிதில் தொற்றிக்கொள்ளும். களைப்பு ஏற்படும் போது எலுமிச்சம்பழத்தில் அதிகமாக காணப்படும் இந்த அமிலம் அந்தக் களைப்பை போக்குகிறது. இந்த அமிலத்துக்கு வேறு பெயரும் உண்டு. அதன் பெயர் வைட்டமின் ‘சி’, இது குறைந்தாலும் களைப்பு ஏற்படும். குறிப்பாக கோடைகாலத்தில் மிக அதிக களைப்பு ஏற்படும்.
Tags:    

Similar News