லைஃப்ஸ்டைல்
மாணவர்கள் காலம் பொன் போன்றது என்பதை நினைத்து செயல்பட வேண்டும்

மாணவர்கள் காலம் பொன் போன்றது என்பதை நினைத்து செயல்பட வேண்டும்

Published On 2019-08-09 05:50 GMT   |   Update On 2019-08-09 05:50 GMT
காலம் பொன்போன்றது என்பதை மாணவர்கள் எந்த நேரத்திலும் நினைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு சில ஆலோசனைகள்.
உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வருவது ஸ்மார்ட்போன்கள். அவற்றிற்கு அடிமையாகி இருப்பவர்கள் ஏராளம். ஆனால் அதில் இருக்கும் நன்மைகளை மட்டும் எடுத்துக் கொள்ள மாணவ-மாணவிகள் நேரம் ஒதுக்க வேண்டும். பொழுதை கழிக்கக்கூடிய அம்சங்களில் ஆர்வம் காட்டினால் யாருக்கும் பயனில்லை. காலம் பொன்போன்றது என்பதை மாணவர்கள் எந்த நேரத்திலும் நினைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். இந்த காலகட்டத்தில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு சில ஆலோசனைகள்:

* முடிந்தவரை தகவல் தொடர்புக்காகவும், படிப்புக்கு தேவையான தகவல்களை திரட்டுவதற்கு மட்டும் செல்போன்களை பயன்படுத்துங்கள்.

* வீடியோ விளையாட்டுகளில் முடங்கிப்போதல், சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடத்தல், நண்பர்களுடனும், தோழிகளுடனும் அரட்டை அடித்தல் போன்றவற்றில் பொழுதை கழிக்கவேண்டாம்.

* ஒரு நொடி நம்மை கடந்தாலும், அது திரும்ப கிடைக்காது. நாம் கைவிட்ட ஒவ்வொரு மணித்துளிகளும் நம்முடைய பயனுள்ள வாய்ப்புக்கான இழப்பாகும். அதனால் காலவிரயத்தை தவிருங்கள்.

* பள்ளி, கல்லூரி நேரம் தவிர மற்ற நேரங்களில் படிப்பு தொடர்பானவற்றில் மனதை செலுத்துங்கள்.

* விடுமுறை நாட்களில் நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுங்கள். அப்போது கல்வி தொடர்பான நூல்களை படிப்பது அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், பொது அறிவுகளை வளர்த்துக் கொள்ளவும் உதவும்.

* இந்த காலகட்டத்தில் செல்போன்களிலேயே நாட்டு நடப்புகள் வந்துவிடுகிறது என்பதால் மாணவ-மாணவிகளிடம் பத்திரிகைகள், இதழ்கள் படிக்கும் பழக்கம் குறைந்துவருகிறது. ஆனால் அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நூலகங்களுக்கு சென்று நாளிதழ்களை கற்பதே நலம்.

* படிக்கும் பாடத்தை தவிர்த்து பொது அறிவு, வரலாறு, அரசியல், விளையாட்டு, சமூக நிகழ்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கற்கவேண்டும். இது சிவில் சர்வீசஸ் தேர்வு, பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வுகள் எழுதும்போது மிகுந்த பயனளிக்கும். இதற்கு வெறும் செல்போனால் மட்டும் பயன்பெற்றுவிடமுடியாது. கண்டிப்பாக நூல்கள், நாளிதழ்களை கற்க வேண்டும்.

* எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, தேசிய தகுதிகாண் தேர்வு என்று வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி படிப்பு மட்டும் அதற்கு உதவிவிடாது. அதற்கு தேவையான பயிற்சி பெறுவதிலும் ஆர்வம் கொள்ள வேண்டும்.

* வெற்றிக்கான இலக்கை முதலில் மனதில் நிறுத்தி, அதை அடைவதற்கு தேவையான நேரம், முயற்சி, உழைப்பு ஆகியவற்றை இந்த மாணவ பருவத்தில் சரியாக கொடுத்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 
Tags:    

Similar News