லைஃப்ஸ்டைல்

உங்கள் குழந்தையை தவழ விடுங்கள்

Published On 2019-01-12 06:06 GMT   |   Update On 2019-01-12 06:06 GMT
இந்தக் காலத்து பெற்றோர் தங்கள் வேலைக்குத் தடை இருக்கக் கூடாது என குழந்தையின் முக்கியமான வளர்ச்சி நிலையைத் தடை செய்து விடுகிறார்கள்.
அப்பா - அம்மா இருவரும் வேலைக்குப் போகும் அவசரத்தில் ஆலாய்ப் பறந்து கொண்டிருக்க… விவரம் புரியாத குழந்தை அம்மாவைத் தேடி, தவழ்ந்து போய் காலைப் பிடிக்கும். உடனே,  குழந்தையைத் தூக்கி, வாக்கரில் உட்காரவைத்து விடுகிறார்கள், இந்தக் காலத்துப் பெண்கள். தங்கள் வேலைக்குத் தடை இருக்கக் கூடாது என இப்படிச் செய்யும் பெற்றோர்கள், குழந்தையின் முக்கியமான வளர்ச்சி நிலையைத் தடை செய்து விடுகிறார்கள்.

அதே போல, “எங்க பப்பு, தவழவே இல்லை தெரியுமா? குப்புற விழுந்ததுக்கப் புறம், நேரடியாக உக்காந்துடுச்சு!’ என்று பெருமையாகப் பேசுவார்கள் சில பெற்றோர்கள். அதுவும் பெருமைக்குரிய விஷயம் அல்ல; கவலைக்குரிய விஷயம். தவழ்தல் என்பது, குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமான மைல்கல்.
குழந்தை அதைச் செய்யாமல், அடுத்தக் கட்டத்துக்குப் போவது சரியானது அல்ல. தவழ்தலைத் தடுத்தால், பின்னாளில் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் ஒருங்கிணைக்கும் திறனில் குறைபாடு ஏற்படும்.
 
தவழ்தல் என்னும் செயல், குழந்தையின் இடது மற்றும் வலது மூளைப் பகுதிகள் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பிப்பதன் அறிகுறி. இந்தக் கால கட்டத்தில், குழந்தைகள் எழுந்து நடந்து, வீடு முழுவதும் ஓடி, ஏறி, இறங்கி எனத் துறு துறுவென இருக்கும் நிலை. மூளையின் இட வலப்பகுதிகளின் ஒருங்கிணைப்பு என்பது, குழந்தையின் பிற்கால வாழ்க்கைக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று.

அப்போது தான், குழந்தை எந்த வேலையையுமே நன்கு செய்ய முடியும். படிப்பு என்பது இடது பக்க மூளையின் வேலை. மற்ற படைப்புத் திறன் எல்லாம் வலது பக்க மூளையின் வேலை. எனவே, இரண்டும் ஒருங்கிணைந்து வேலை செய்வதைப் பொறுத்து தான், குழந்தையின் மற்ற வளர்ச்சிகள் இருக்கும்.



எனவே, குழந்தைகள் தவழும் பருவத்தில், அவசியம் அவற்றைத் தவழ விட வேண்டும். தவழும் பருவத்தில் அதைத் தடுத்து, குழந்தையைத் தூக்கி வாக்கரில் போடுவதால், மூளையின் தூண்டுதலை நாம் தடை செய்கிறோம்.  கல்வியில் பின்தங்கி இருக்கும் பிள்ளைகள், தவழ்வதைத் தவற விட்டவர்களாக இருக்கலாம். பெற்றோர்களுக்கு இது ஓர் அவசியமான ஆலோசனை.

செயல்திறன் குறைந்த குழந்தை (Clumsy child) தவழாமல் வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் `க்ளம்ஸி சைல்ட்’ எனப்படும் செயல்திறன் குறைந்த குழந்தைகளாக உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது.

உறுப்புகளின் வளர்ச்சியை ‘உள்ளிருந்து வெளி வரை’ என்றும் செயல்பாடுகளின் மேம்பாட்டை ‘தலை முதல் கால் வரை’ என்றும் நாங்கள் குறிப்பிடுவோம்.
உள்ளுறுப்புகள் அம்மாவின் வயிற்றுக்குள் குழந்தை இருக்கும் போதே முழுமையான வளர்ச்சி அடைந்து விடும்.

வெளியே வந்தபிறகு, கை, கால், போன்ற மற்ற உறுப்புகள், பெரியவர்களுக்கு இருப்பது போன்ற தோற்றத்தில் வளர ஆரம்பிக்கும்.

முதல் 3 மாதங்களில் தலை நிற்பது, 5 மாதங்களுக்குள் குப்புறக் கவிழ்வது, பிறகு உட்கார்வது, முட்டி போட்டு தவழ்வது (நாலு கால் தவழ்தல்), அதன் பின்னர் எழுந்து நிற்பது, நடப்பது, ஓடுவது என்று சாதாரணமான குழந்தைக்கு தலை முதல் கால் வரை வளர்ச்சிகளும் சாதாரணமாக இருக்கும்.

ஒன்று முதல் 3 வயது வரை குழந்தை மிக துறு துறுப்பாக ஓடி ஆடுவது என்று இருக்க வேண்டும்.
Tags:    

Similar News