வழிபாடு

திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வரக்கூடாது: போலீஸ் எச்சரிக்கை

Published On 2023-06-01 07:18 GMT   |   Update On 2023-06-01 07:18 GMT
  • நாளை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
  • தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதை முன்னிட்டு கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் குழுக்களாக வந்து கொண்டு இருக்கின்றனர். சாலையின் இடது புறமாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதே பக்கத்தில் பாதயாத்திரை பக்தர்களும் செல்லும் போது, வாகனங்கள் வருவதை கவனிக்க முடிவது இல்லை.

ஆகையால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு மோட்டார் வாகன சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின் படி பாதசாரிகள் எப்போதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதே போன்று பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூடுமானவரை இரவு நேரம் பாதுகாப்பான இடங்களில் தங்கி விட்டு பகல் நேரத்தில் பாதயாத்திரை மேற்கொள்ளலாம்.

இரவு நேர பாதயாத்திரையை தவிர்க்குமாறும், ஒருவேளை இரவு நேர பாதயாத்திரை மேற்கொண்டால் முதுகு பகுதி மற்றும் தோல் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும்.

மேலும் கோவிலுக்கு இறைவழிபாட்டு எண்ணத்துடன் வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்து வரவோ, அதை வெளிப்படுத்தும் வகையிலான கொடிகளை கொண்டு வரவோ கூடாது.

கோவிலுக்கு சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்தும் வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News