வழிபாடு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் 2-ம் நாள் தேரோட்டம்

Published On 2022-06-15 06:02 GMT   |   Update On 2022-06-15 06:02 GMT
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
  • வெள்ளிக்கிழமை அதிகாலை பரிவார தெய்வங்களுடன் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக 3 நாட்கள் நடக்கும் தேரோட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பூக்கடை கார்னரில் நின்ற தேரானது தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக சென்று பழைய பஸ் நிலைய வாயிலில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில் இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு வடக்கு ரதவீதி, தெற்கு ரத வீதி வழியாக சென்று தேர் நிலையில் நிறுத்தப்படும். இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) மாலை சாமி நெய்க்காரப்பட்டி பவனி செல்லுதலும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரிவார தெய்வங்களுடன் திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்வும் நடக்கிறது. மேலும் விழாவில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

Tags:    

Similar News