வழிபாடு

வேடசந்தூரில் அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு கூறிய பூசாரி

Published On 2024-03-13 05:30 GMT   |   Update On 2024-03-13 05:30 GMT
  • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
  • நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடை வீதி மாரியம்மன் கோவில் அருகில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், காமாட்சியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் வேடசந்தூர், ஆயக்குடி, காலப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இரவு 11 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் பூசாரி தங்கவேல் (70) அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.

திருமண தடை, குழந்தைப்பேறு, கடன் பிரச்சினை, தொழிலில் நஷ்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக பூசாரியிடம் பக்தர்கள் அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.

இந்த கோவிலில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது. இதற்காக கோவில் வளாகத்திலேயே மிகப்பெரிய வானலி வைக்கப்பட்டு பூரி தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் அந்த பூரி படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News