வழிபாடு

சபரிமலையில் உள்ள பதினெட்டுப் படிகளின் சிறப்பு

Published On 2022-12-01 08:44 GMT   |   Update On 2022-12-01 08:44 GMT
  • 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.
  • 18 படிகள் புராதன வரலாறு கொண்டதாகும்.

சத்தியம் காக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகள் என்ற அடைமொழிகள் சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கும் உண்டு. ஐயப்பன் சபரிமலையில் எழுந்தருளும் சமயம் ஐயப்பனாய் அவதரித்த மணிகண்டனுக்கு, கோவில் எழுப்பிய போது கோவிலின் ஞான பீடத்திலே அமர ஐயப்பன் எழுந்தருளினார். அப்போது தான் 18 படிகள் உருவானது.

அதாவது ஐயப்ப அவதாரத்தில் 12 வயது பாலகனாக ஐயப்பன் உள்ளதால் சிறு வயதினராக நடந்து வரும் ஐயப்பன் உயரமாக அமைந்திருக்கும் ஞான பீடத்தில் ஏறி அமர சிரமப்படக் கூடாது என்ற தெய்வீக எண்ணத்தில் அங்கு கூடியிருந்த தேவர் கூட்டத்தில் உள்ள 18 தேவதைகள் தரையிலிருந்து கோவில் பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசையாகப் படுத்துக் கொண்டனர். ஐயப்பன் பதினெட்டுப் படிகளாகப் படுத்துள்ள தேவதைகள் மீது பாதம் வைத்து ஏறி வந்து ஞான பீடத்தில் அமர்ந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக் கொண்டார்.

இப்படி, எண்ணிக்கை முறையில் பதிக்கப்பட்ட 18 படிகளானது மகாவிஷ்ணுவின் மறு அவதாரமான பரசுராமரின் கரங்களால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெற்று, சத்தியமான பொன்னுகளால் பதினெட்டாம் படிகளாக இன்று கம்பீரமாக காட்சி அளிக்கிறது

சபரிமலையின் 18 படிகள் மிகவும் தெய்வ முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாறு கொண்டதாகும். பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பே பரசுராமரால் அகத்தியர் முன்னிலையில் பந்தள ராஜாவால் இந்த 18 படிகள் கட்டப்பட்டது. இந்த 18 படிகள் மூலமாகத்தான் மணிகண்டனாகிய ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு ஏறிச்சென்று அங்கு ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஐயப்ப விக்ரகத்தில் ஐக்கியமானார்.

18 என்ற கணக்கு வந்த விதம் பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. இந்திரியங்கள்-5, புலன்கள்-5, கோஷங்கள்-5, குணங்கள்-3, மொத்தம்-18 என்பர்.

இந்திரியங்கள் : கண், காது, மூக்கு, நாக்கு, கை-கால்கள்.

ஐந்து புலன்கள் : பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல்.

கோஷங்கள் ஐந்து: அன்மைய கோஷம், பிராமணய கோஷம், மனோமய கோஷம், ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம்.

மூன்று குணங்கள் : சத்வகுணம், ரஜோகுணம், தமோ குணம்.

மேற்கூறிய பதினெட்டையும் கட்டுப்படுத்தி ஜெயித்து இந்த பதினெட்டுப் படிகளையும் கடப்பவர்கள் மட்டுமே ஐயப்பனின் முழு அருளைப் பெற முடியும்.

பகவத்கீதை 18 பாகங்கள், புராணங்கள் 18, குருஷேத்திரப் போர் நடந்த நாட்கள் 18 எனக் கூறுவர்.

இதுதவிர 18 என்ற எண்ணுக்கு வேறு சில சிறப்புகளையும் கூறுவர். மொழி 18, ராகம் 18, சித்தர்கள் 18 பேர் இப்படி 18 என்ற எண்ணிற்கு பல சிறப்புகள் உள்ளன.

போர் வீரனாகிய ஐயப்பன் 18 வகை போர்க்கருவிகளை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். சபரிமலைக் கோவில் பிரதிஷ்டைக்கு வந்த ஐயப்பன் 18 ஆயுதங்களையும் 18 படிகளாகத் தியாகம் செய்தான் என்றும் கூறுவர்.

ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளை வைத்து 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவை வில், வாள், வேல் கதை, அங்குசம், பரசு. பிந்திபாவம், பரிசை, குந்தகம், ஈட்டி, கைவாள், சுக்குமாந்தடி, கடுத்திவை, பாசம், சக்கரம், ஹலம், மழுக், முஸல ஆகிய 18 போர் கருவிகள் ஆகும்.

சரீர சாஸ்திர அமைப்பின்படி உடல் அமைப்பு முதுகுத் தண்டில் ஆரம்பித்து 1. மூலாதாரம், 2. ஸ்வாதிஸ்டானம், 3.மணி பூரகம், 4. அனாகதம், 5. வம்பி, 6. விசுத்தி, 7. ஆங்கத, 8. பிந்து, 9. அர்த்தசக்கரம், 10. ரோகினி, 11. நாகம், 12. சாந்தாரம், 13. சக்தி, 14. வியனிக, 15. சமன, 16. உன்மன, 17. மகாபிந்து, 18. சகஸ்ராரம் என்கிற யோக சாஸ்திர ரகசியம் 18 படிகள் மூலம் அறிவிக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

இப்பேற்பட்ட மகிமை வாய்ந்த படிகளின் தெய்வீகத் தன்மையைக் காப்பாற்றவும் முறையாக விரதம் இருந்து படியேறுவோர் நல்ல பயன்களைப் பெறவும், சரியான விரதம் இல்லாமல் இந்த படிகளைக் கடப்பவர்களால் ஏற்படும் அபசாரத்திற்குப் பரிகாரமாகவும் தான் படி பூஜை நடக்கிறது. இந்தப் படிகளில் வீற்றிருக்கும் ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியாக "ஆவாகனம்" என்ற கோட சோப சார பூஜையையும் செய்து 18 படிகளின் புனிதத் தன்மையை இன்றளவும் காத்து வருகின்றனர்.

சத்திய தர்மங்கள் வடிவில் கடுத்தசாமி, கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோர் காவல் தெய்வங்களாக காத்து வருகின்றனர். மனதில் பக்தியின்றி நியமநிஷ்டங்களை குறைவாக கொண்ட பக்தர்கள் அந்த 18 தேவதைகள் மீது கால் வைக்க நினைத்தால், மேல் சொன்ன காவல் தெய்வங்கள், அத்தகைய பக்தர்களுக்கு துன்பங்களையும், கஷ்டங்களையும் ஏற்படுத்துவார்கள். இந்த படிகளுக்கு 'தந்திர' முறையில் மாதா மாதம் பூஜை செய்து அந்த படிகளின் மகிமையையும், புனிதத் தன்மையையும் புனருதாருணம் செய்கின்றனர். சபரிமலை 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய ஷேத்திரமாகும். இந்து மத ஆசாரப்படி சபரிமலைக்கு போகும் முன்பு சில முக்கிய கோவில்களை (ஷேத்திரங்களை) தரிசனம் செய்துவிட்டு போக வேண்டும்.

கோவிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும். சபரிமலையைச் சுற்றி 18 மலைகள் உள்ளன. அந்த 18 மலை தெய்வங்கள் 18 படிகளாக, ஐயப்பன் சன்னதிக்கு முன்பாக இருப்பது மிகவும் விசேஷமானது.

இந்த 18-ம் படியை தங்க கவசம் இட்டு தகடு வேயும் பணி 1985 அக்டோபர் 30-ல் நடந்தது. இதற்காக திருவாங்கூர் தேவஸ்தானத்தினர் 10 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளி மற்றும் பித்தளை, ஈயம், செம்பு போன்ற உலோகங்களையும் கொடுத்தனர். தற்சமயம் படிகளில் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை. பக்கவாட்டில் சுவரில் உடைக்க வேண்டும்.

பதினெட்டு படிகளுக்கும் இப்படி பலவிதமான தத்துவங்கள் இருக்கின்றன.

18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி, சினம், காமம், பொய், களவு, வஞ்சநெஞ்சம், சுயநலம், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்ர, தாமஸ, ராஜஸ என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனை காணலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News