வழிபாடு

பம்பை திரிவேணி சங்கமம்

Published On 2022-12-15 13:38 IST   |   Update On 2022-12-15 13:38:00 IST
  • ஸ்ரீராமர் பித்ரு தர்ப்பணம் கொடுத்த இடம் இது.
  • ஐயப்ப சுவாமிகள் இங்கு பித்ருகளுக்குத் திதி செய்கிறார்கள்.

பம்பையில் பம்பா ஆறு உள்ளே புகும் இடம் தான் திரிவேணி சங்கமம். மலையில் இருந்து இடதுபுறமாக வரும் கல்லாறு, வலது புறம் வந்து சேரும் பம்பை ஆறு, பூமியின் அடியிலிருந்து நீரூற்றாக உற்பத்தியாகும். ஆகாச கங்கை மூன்று ஆறுகளும் சேரும் இடம் தான் திரிவேணி சங்கமம். சிறு வழி வழியாக வரும் பக்தர்கள் வரும் முதல் பாலம் அருகில் இந்த இடம் உள்ளது.

இந்த இடத்தின் கரையில் நமது முன்னோர்களுக்குத் திதி (பித்ருதானம்) கொடுக்க புரோகிதர்கள் நிறையபேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஸ்ரீராமர் பித்ரு தர்ப்பணம் கொடுத்த இடம் இந்த இடம். ஆகையால் சுவாமிகள் இங்கு பித்ருகளுக்குத் திதி செய்கிறார்கள்.

சுப்ரமணியர் பாதை

பம்பையில் இருந்து நீலிமலை ஏற ஆரம்பிக்கும்போது இடதுபுறம் மலை ஏற்றமான பாதை (தற்சமயம் பைப் பிடிப்புகள் வைத்துச் சுலபமாக்கப்பட்டுள்ள பாதை) இப்பாதை ஆரம்பிக்கும் இடத்தில் வலதுபுறமாகச் சமதளமாக ஒரு பாதை செல்வதைப் பார்க்கலாம். ஆர்ச் தெரியும். பக்தர்கள் சிரமின்றி ஏறவும் டிராக்டர் முதலியன மேலே சபரிமலை செல்லவும் 40 ஆண்டு களுக்கு முன் போடப் பட்ட பாதைதான் சுப்ரமணியர் பாதை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்ரிலேண்ட் சுப்ரமணியம் `சுவாமி ஐயப்பன்' என்று ஒரு சினிமா தயாரித்தார். பாட்டுகள் அருமையாக இருந்து ஜெமினிகணேசன், எம்.என். நம்பியார் முதலியவர்கள் நடித்த ஐயப்பன் வரலாற்றுப் படமானதால் அந்தப் படம் நல்ல வசூல் கொடுத்தது. இந்தப் படத்தில் கிடைத்த லாபத்தில் பக்தர்கள் வசதிக்காக இந்தப் பாதையை மெர்ரிலேண்ட் சுப்ரமணியம் அமைத்தார். பின்னர், சுப்ரமணியம் கேரளா சென்று டாக்டர் வேலாயுதம் பிள்ளை அவர்களோடு சேர்ந்து அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தை 1945-ல் நிறுவினார்.

நீலிமலை

பம்பையில் இருந்து நீலிமலை என்ற செங்குத்தான பாதையில் பக்தர்கள், சபரிமலை நோக்கிச் செல்கின்ற னர். மதங்க ஆசிரமத்தில் வசித்து வந்த மாதங்க மகிரிஷியின் மகள் நீலி. இவளைச் சிவபெருமானுக்கு மணம் செய்வித்ததாகப் புராணம் சொல்கிறது. இந்த முனிவரின் மகள் பெயரிலேயே நீலிமலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

உருண்டை எறிதல்

நீலிமலை ஏற்றத்தில் முக்கால் பகுதிக்குப் பின் உள்ள உச்சிப் பகுதியில் உள்ள இடத்திற்கு அப்பச்சிமேடு என்று பெயர். கடை கடையாக உட்கார்ந்து சோடா போட்ட எலுமிச்சை சாற்றிற்கு அநியாயக் காசு கொடுத்து உட்கார, இந்த இடத்திற்கு மூச்சு வாங்க வந்து சேருகிறோம். இங்குள்ள அப்பச்சிக்குழி பள்ளத் தாக்கில் அரிசி உருண்டை என்ற பெயரில் அங்கு விற்கப்படும் மாவு உருண்டையைக் கன்னிசாமி வீசுகிற சடங்கு ஒன்று உண்டு. காட்டில் உள்ள துர்தேவதைகளைத் திருப்திப்படுத்த இந்த உருண்டை எறிதல் எனக் கூறப்படுகிறது.

அந்தக் காலங்களில் இந்த அப்பச்சி மேட்டில் காலங்காலமாக வசித்து வரும் ஆதிவாசிகள், பக்தர்கள் வரும் சமயம் ஒதுங்கி பள்ளத்தில் புதர்களில் பசியோடு பதுங்கியிருப்பார்கள். அவர் களுக்காக அரிசி மாவு உருண்டையை வீசும் பழக்கத்தை நமது மூதாதையர்கள் ஏற்படுத்தினர்.

பஸ்மம் சேகரிப்பது

முதல் வருடம் சபரிமலை வரும் கன்னி சுவாமிகள் மற்றும் பக்தர்கள் சமைத்து விட்டுச் சென்ற சாம்பலை 108 அடுப்பில் இருந்து சேகரிக்க வேண்டும். இதை சலித்து பிரசாத மாகத் தங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

Tags:    

Similar News