வழிபாடு

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பாலாலய யாக சாலை பூஜைகள் தொடக்கம்

Published On 2022-08-12 04:46 GMT   |   Update On 2022-08-12 04:46 GMT
  • கோவிலுக்கு வெளியே புதிய தரை தளம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
  • இன்று (வெள்ளிக்கிழமை) 2-ம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.

தஞ்சையை அடுத்த புன்னநைல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்த கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படும். ஆனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு 17 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடரந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து குடமுழுக்கு நடத்துவதற்காக கோவிலில் திருப்பணிகளை கோவில் நிர்வாகத்தினர் தொடங்கினர். அதன்படி கோவில் கொடிமரத்தின் இருபுறமும் உள்ள மண்டபத்தின் தூண்களில் விரிசல் விழுந்து இருந்ததால் அந்த மண்டபங்களை இடித்து விட்டு புதிய மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டன. அதன்படி 2 புறமும் மண்டபங்கள் இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலுக்கு வெளியே புதிய தரை தளம் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவிலில் உள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களிலும் புனரமைக்கும் பணி தொடங்குவதற்கு முன்னதாக பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கால பாலாலய யாக சாலை பூஜை நேற்று மாலை நடைபெற்றது.

இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் அதிகாரிகள், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 2-ம் கால யாக சாலை பூஜையும், அதை தொடர்ந்து பாலாலயமும் நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News