வழிபாடு

பிராணன் கொடுத்த பிராண நாதேஸ்வரர்

Published On 2024-01-07 08:00 IST   |   Update On 2024-01-07 08:00:00 IST
  • சிவபெருமான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உள்ளார்.
  • அண்ணாமலை என்றால் நெருங்க முடியாத மலை என்று அர்த்தம்.

தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிவாலயங்கள் உள்ளன. மூவேந்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயங்களில் பல நூறு ஆலயங்கள் அழிந்துவிட்டன. சில நூறு ஆலயங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன.

இந்த ஆலயங்களில் உள்ள சிற்பங்கள், ஆலய அமைப்புகள், வழிபாடு முறைகள் அனைத்தும் நம்மை இன்றும் பிரமிக்க வைக்கின்றன. ஆனால் பழமையான அந்த ஆலயங்களின் புனித தன்மைகளை பக்தர்களில் 90 சதவீதம் பேர் அறிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள்.

குறிப்பாக ஈசனின் பெயரை உச்சரித்து விட்டு அடுத்த நிமிடமே அதை மறந்தும் விடுகிறார்கள். ஒவ்வொரு சிவாலயத்திலும் சிவபெருமானுக்கு ஒவ்வொரு பெயர் இருக்கிறது. ஒரு பெயர் போல இன்னொரு பெயர் இருப்பதில்லை.

அந்த வகையில் தமிழகத்தில் சிவபெருமான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உள்ளார். விதி விலக்காக சில பெயர்கள் மட்டும் பல கோவில்களில் இடம் பெற்றுள்ளது. உதாரணமாக அகத்தீஸ்வரர் கோவில்கள் தமிழ்நாடு முழுக்க உள்ளன. தொண்டை மண்டலத்தில் மட்டும் 108 அகத்தீஸ்வரர் ஆலயங்கள் இருக்கின்றன.

குறுமுனியான அகத்தியர் எந்தெந்த இடங்களில் எல்லாம் லிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டாரோ அந்த இடங்களில் எல்லாம் சிவாலயங்கள் பிரமாண்டமாக உருவாகின.

அகத்தியர் வழிபட்ட லிங்கம் என்பதால் அந்த தலத்து ஈசனுக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயர் உருவானது. இதே போன்றுதான் பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு செய்த லிங்கங்கள் மூலவராக உள்ள சிவாலயங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. அந்த ஆலய ஈசனின் பெயர்கள் பஞ்சபாண்டவர்களின் பெயர் தாங்கியுள்ளன.

இவை தவிர சிவபெருமான் கணக்கிட முடியாத அளவுக்கு எத்தனையோ திருவிளையாடல்களை நடத்தி உள்ளார். முனிவர்கள், மகான்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரிடமும் சிவபெருமான் தனது லீலையை காட்டி உள்ளார். அவ்வளவு ஏன்? தனது உடம்பில் சரிபாதி இடம் கொடுத்துள்ள அம்பிகையுடன் கூட அவர் திருவிளையாடல் செய்ததுண்டு. அப்படி அவர் நடத்திய திருவிளையாடல்களை பிரதிபலிக்கும் ஆலயங்கள் தமிழகம் முழுக்க உள்ளன.

சில சமயங்களில் விநாயகர், முருகன், பெருமாள் ஆகியோர் சிவனை வழிபட்டு சாப நிவர்த்தி பெற்றுள்ளனர். அவர்கள் வழிபட்ட இடங்களில் அதற்கான சிவாலயங்கள் உருவாகி உள்ளன. சில ஊர்களில் அந்த ஊரின் பெயருக்கு ஏற்ப ஈசன் பெயர் அமைவதுண்டு. ஆனால் அதிலும் ஒரு வரலாறு அடங்கி இருக்கும்.

மொத்தத்தில் பழமையான சிவாலயங்களில் உள்ள ஈசனின் பெயரை படித்து பார்த்தால் அதன் பின்னணியில் ஒரு சம்பவம் அல்லது வரலாறு அல்லது மிகப்பெரிய நிகழ்ச்சி நிச்சயம் இருக்கும். சிவபெருமானின் ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு ரகசியம் ஊடுருவி இருக்கிறது. ஆனால் நாம் அந்த ரகசியங்களை கண்டு கொள்ளாமலேயே இருக்கிறோம்.

எந்த ஊருக்கு போனாலும் நிச்சயம் ஏதாவது ஒரு பழமையான சிவாலயம் இருக்கும். அந்த ஆலயத்தை யார் கட்டியது? எப்படி கட்டினார்கள்? அதன் வரலாறு என்ன? என்பதையெல்லாம் அந்த தலத்து ஈசனின் பெயர் ஒரே வரியில் சொல்லி விடும்.

உதாரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் என்ற பெயரை எடுத்துக் கொள்ளுங்கள். அண்ணாமலை என்றால் நெருங்க முடியாத மலை என்று அர்த்தம்.

அருணாசலேஸ்வரர் என்பதில் அருணன் என்பது செந்நிற தீயை குறிக்கும். சிவபெருமான் அடிமுடி வரலாற்றை நடத்தி திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் தீப் பிழம்பாக காட்சியளித்த இடம். இப்படி ஒவ்வொரு ஈசனின் பெயருக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி ஆலயத்தில் இருக்கும் சிவபெருமானின் பெயரும் ஒரு புராண நிகழ்வை பின்னணியாக கொண்டு அமைந்து இருக்கிறது.

அந்த தலத்தின் ஈசனின் பெயர் பிராண நாதேஸ்வரர் இவரை பிராண வரதரேஸ்வரர் என்றும் அழைப்பார்கள். பிராணன் என்றால் உயிர் என்று அர்த்தம். பக்தன் ஒருவனுக்கு உயிரை திருப்பி கொடுத்ததால் அந்த தலத்து ஈசன் பிராண நாதேஸ்வரர் என்ற பெயரை பெற்றார்.

இதற்கு காரணமாக இருந்தது பார்வதிதேவி ஆவார். ஒரு பெண்ணின் மாங்கலயத்தை காத்து அருள்பாலிக்க செய்வதற்காகவே அவள் ஈசனிடம் சொல்லி பிராணனை திருப்பி கொடுக்க செய்தாள். இதன் காரணமாக இந்த தலத்தில் அம்பாளுக்கு மங்களநாயகி என்ற பெயர் ஏற்பட்டது. இவர்கள் இருவரையும் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News