வழிபாடு

கற்பூர ஆழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை படத்தில் காணலாம்.

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

Published On 2022-12-30 04:54 GMT   |   Update On 2022-12-30 07:42 GMT
  • மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
  • சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வருடம் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை கடந்த 27-ந் தேதி நடந்தது. அப்போது தங்க அங்கி அணிவித்த ஐயப்பனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதன் பிறகு அன்றைய தினம் இரவு மண்டல கால பூஜை நிறைவடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. சாமி தரிசனத்திற்கு இன்று மட்டும் 32 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். நாளை முதல் வழக்கம் போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம், கலச பூஜை நடைபெறும். மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுடன் இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

மகரவிளக்கு பூஜை சமயத்திலும் தினசரி 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். அதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

நிலக்கல்-பம்பை, பம்பை- நிலக்கல் இடையே இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும். அதே போல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News