வழிபாடு

கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை மறுநாள் சூரசம்ஹாரம்

Published On 2023-11-16 06:23 GMT   |   Update On 2023-11-16 09:44 GMT
  • விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை மறுநாள்
  • ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று மதியம் சண்முக விலாசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

தொடர்ந்து மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு பால், தயிர் இளநீர் பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

4-ம் திருவிழாவான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் கடற்கரையில் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News