வழிபாடு

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-03-20 07:08 GMT   |   Update On 2023-03-20 07:08 GMT
  • தேரோட்டம் ஏப்ரல் 4-ந் தேதி நடக்கிறது.
  • 6-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 7 மணி அளவில் அங்குள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. பின்னர் கொடி மரத்திற்கும், சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலசந்தி பூஜைகள் நடக்கிறது. 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனையை தொடர்ந்து 7.35 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News