வழிபாடு

இறைவன் படியளந்த திருவிளையாடலை உணர்த்தும் மார்கழி அஷ்டமி சப்பர திருவிழா நாளை நடக்கிறது

Published On 2026-01-10 08:57 IST   |   Update On 2026-01-10 08:57:00 IST
  • அம்மன் தேரை பெண் இழுப்பது தனிச்சிறப்பாகும்.
  • தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது நடந்து வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை மாதம் மாசி வீதிகளில் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதன்பின்னர் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழா பிரசித்தி பெற்றவை. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

திருவிழா தினத்தன்று காலை 5 மணிக்கு சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்படாகி கீழமாசி வீதி வருவர். அங்கு தனித்தனியாக தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து கிளம்பி யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைவர்.

அதில் அம்மன் தேரை பெண் இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.

இந்த மார்கழி மாத அஷ்டமி திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது நடந்து வருகிறது. மேலும் தேர் வரும் பாதைகளை சீரமைத்து தேர் செல்வதற்கு சாலை வசதியை சீரமைத்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். தற்போது சாலைகள் தேர் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News