வழிபாடு

ஓரியூர் புனித அருளானந்தர் ஆலய சப்பரப்பவனி

Published On 2023-06-23 06:56 GMT   |   Update On 2023-06-23 06:56 GMT
  • ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர்.
  • கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற 76-ம் ஆண்டு விழா, திருத்தல பங்கு உருவாகிய 80-ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த ஆலய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஆடம்பர கூட்டு திருப்பலியை செங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் அதிபர் ஹென்றி ஜெரோம் தலைமையில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித அருளானந்தர், கன்னிமரியாள், தூய மிக்கேல் அதிதூதர் பவனியாக சென்று இறை மக்களுக்கு ஆசீர் வழங்கினர். இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர்.

நேற்று நன்றி திருப்பலியை அருட்தந்தையர்கள் சைமன் ராஜ், மரிய தேன் அமிர்தராஜ், அலெக்சாண்டர் ஆகியோர் நிறைவேற்றினர்.மாலை ஒரியூர் பங்குத்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறை மக்கள், பங்கு பேரவையினர், பங்கு கிராம தலைவர்கள், இயேசு சபை குழுமத்தினர், அருட் சகோதரிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News