வழிபாடு

வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச கொடியேற்றம்

Published On 2024-01-24 05:27 GMT   |   Update On 2024-01-24 05:27 GMT
  • சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறும்.
  • ஞானசபையில் கொடி ஏற்றம் நடந்தது.

வடலூர்:

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழா இந்த ஆண்டு 153-வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடைபெற்றது. 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

இன்று காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப் பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றமும், காலை 10 மணிக்கு ஞானசபையில் கொடி ஏற்றமும் நடந்தது.

நாளை (25-ந்தேதி) தைப்பூச திருவிழா வையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 5.30 மணி என 6 காலம், 7 திரை விலக்கி ஜோதிதரிசனம் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வருவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பபடுகிறது. வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

Tags:    

Similar News