வழிபாடு

மறுபிறவி எடுத்தாலும் தர்ப்பணம் வீணாகாது- தயானந்த சுவாமிகள்

Published On 2023-10-13 06:19 GMT   |   Update On 2023-10-13 06:19 GMT
  • இறப்பு என்பது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது.
  • ஈஸ்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான்.

இந்து மதம் பற்றியும் வேத நெறி குறித்தும், சடங்குகள் குறித்தும் தயானந்த சுவாமிகள் ஏராளமான, அற்புதமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அவரது விளக்கங்கள் ஒவ்வொன்றும் உயர்வான சிந்தனைகளைக் கொண்டவை. ஆழமான கருத்துக்கள் கொண்டவை.

ஒருவர், `ஆத்மா எப்போது சாந்தி அடையும்?' என்று கேட்ட கேள்விக்கு தயானந்த சுவாமிகள் சிறப்பான பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இறப்பு என்பது நமது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது. இந்த ஜீவன் சரீரத்திலிருந்து போகும் பொழுது, ஒரு சூட்சமமான தேகத்தோடுதான் பிரிய வேண்டும்.

எப்படி சொப்பனம் காணும் ஜீவன், சொப்பனத்தில் தனக்காக ஒரு சூட்சமமான தேகத்தை எடுத்துக் கொள்ளுகிறதோ, அதேபோல் இறக்கும் போதும், அம்மாதிரியான ஒரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. சொப்பனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த சூட்சம தேகமானது, சொப்பனம் காணும் மனிதனின் படுத்திருக்கும் தேகம் போலவே இருக்கும். அம்மாதிரியே இறக்கும் போதும், ஜீவன் இந்த சரீரம் போலவே ஏற்பட்ட ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும். - அதற்கு பிரேத சரீரம் என்றுபெயர்.

இந்த பிரேத சரீரம் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நமக்கு நூறு வருசமாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அதனால் தான் நாம் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லி உள்ளபடி, அந்த பிரேத சரீரத்தில் இருந்து ஜீவனானவன் விடுபட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால், பல ஈமச்சடங்குகளையும், தெய்வ கர்மாக்களையும் செய்கிறோம்.

அதன்பிறகு கூட ஒவ்வொரு அமாவாசையன்றும், ஆண்டுதோறும், திதியன்றும் சில கர்மாக்களை செய்கிறோம். அந்த ஜீவன் மறுபிறவி எடுத்தால், செய்த சடங்குகள் வீணாகுமே என்று நாம் நினைக்கவேண்டாம். ஈஸ்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான்.

ஜீவனுக்கு `தன்னுடைய ஆத்மாவும், ஈஸ்வரனுடைய ஆத்மாவும் ஒன்று' என்று தெரிகிறவரை மறுபிறவி உண்டு.

Tags:    

Similar News