ஆன்மிகம்
அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தா காட்சி.

மேல்மலையனூர் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Published On 2018-12-07 07:46 GMT   |   Update On 2018-12-07 07:46 GMT
விழுப்புரம் மாவடடம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவடடம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத அமாவாசை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 மணியளவில் அங்கிருந்த அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு சென்று ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் அம்மன் பக்திப் பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 12.30 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.



நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

விழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News