ஆன்மிகம்
மேல்மலையனூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Published On 2018-09-11 03:52 GMT   |   Update On 2018-09-11 03:52 GMT
அமாவாசையை யொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத அமாவாசையான நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு ஆதிபராசக்தி அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரவு 11.30 மணிக்கு உற்சவ அம்மன் பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்த ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளினார்.

பின்னர் பூசாரிகள் தாலாட்டு பாடல்கள் பாட அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர். ஒரு சில பக்தர்கள் அருள் வந்து ஆடினர். நள்ளிரவு 12.35 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூருக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
Tags:    

Similar News