கிரிக்கெட்

பும்ராவுக்கு துரதிருஷ்டம், எனக்கு 6 விக்கெட்: முகமது சிராஜ்

Published On 2024-01-04 07:31 GMT   |   Update On 2024-01-04 07:31 GMT
  • நான் ஒரு இடத்தை குறி வைத்து நிலையாக பந்து வீசினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
  • பும்ராவும் சிறப்பாக பந்து வீசி தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அவர் 9 ஓவர் வீசி 15 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்து முகமது சிராஜிக்கு டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 60 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியதே சிறந்ததாக இருந்தது.

29 வயதான சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சு தொடர்பாக கூறியதாவது:-

நான் ஒரு இடத்தை குறி வைத்து நிலையாக பந்து வீசினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் டெஸ்ட் நடைபெற்ற செஞ்சூரியன் ஆடுகளம் போலவே இந்த பிட்சும் இருந்தது. முதல் டெஸ்டில் நாங்கள் ரன்களை வாரி கொடுத்தோம். அதுமாதிரி அமைந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி பந்து வீசினோம். எனது தவறை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் பந்து வீசினேன்.

பும்ராவும் சிறப்பாக பந்து வீசி தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவருக்கு துரதிருஷ்டவசமாக விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. எனக்கு 6 விக்கெட் கிடைத்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு சிராஜ் கூறி உள்ளார்.

Tags:    

Similar News