கிரிக்கெட் (Cricket)

சிக்சர் விளாசிய அடுத்த நொடியில் உயிரிழந்த வாலிபர்- அதிர்ச்சி வீடியோ

Published On 2024-06-03 17:52 IST   |   Update On 2024-06-03 17:52:00 IST
  • மும்பையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே மீரா ரோடு பகுதியில் தனியார் நிறுவனத்தின் தலைமையில் ஊழியர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் ராம் கணேஷ் தேவார் என்ற (42) நபர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ராம் கணேஷ் பேட்டிங் செய்கிறார். அப்போது அவர் எதிர்கொண்ட பந்தை இறங்கி வந்து விளாசி சிக்சராக மாற்றினார். பின்னர், அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராகும் நிலையில், அப்படியே மயங்கி விழுகிறார். இதைப் பார்த்த சக வீரர்கள் உடனே ஓடிச் சென்று முதலுதவி செய்ய முயல்கின்றனர். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அவர், எந்த அசைவுமின்றி அப்படியே கிடக்கிறார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. போலீசார் திடீர் மரணம் என வழக்கு பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News