கிரிக்கெட்

விராட் கோலி இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது- ஹர்பஜன் சிங் கருத்து

Published On 2023-05-02 10:02 GMT   |   Update On 2023-05-02 10:02 GMT
  • விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
  • ஸ்ரீ சாந்தை அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் எனவும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

லக்னோ:

லக்னோ-பெங்களூர் இடையே போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கி கொண்டபோது விராட்கோலிக்கும், காம்பீருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

விராட்கோலியிடம் லக்னோ வீரர் கெய்ல் மேயர்ஸ் பேசிக்கொண்டு இருந்தார். அந்த பக்கம் வந்த காம்பீர், கெய்ல் மேயர்சை அவரிடம் என்ன பேச்சு என்று கூறி அழைத்து சென்றார். இதனால் கோலி ஆத்திரம் அடைந்தார். இதேபோல லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக்குடன் கைகுலுக்கும் போதும் கோலி வம்புக்கு இழுத்து ஆத்திரப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து காம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இருவரையும் மற்ற வீரர்கள் தடுத்தப்போது வாக்குவாதம் நிற்கவில்லை. காம்பீர் முன்னோக்கி சென்று கடுமையாக வாக்குவாதம் செய்தார். அவரை கோலி வம்புக்கு இழுத்ததால் ஆத்திரம் அடைந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த வாக்குவாதத்தால் சில நிமிடங்கள் சலசலப்பு நிலவியது. பரிசளிப்பு நிகழ்வின்போது விராட் கோலி கோபத்துடன் காணப்பட்டார். இந்த மோதல் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

காம்பீரும், விராட்கோலியும் இது மாதிரி மோதிக் கொள்வது இது முதல்முறையில்லை. டெல்லியை சேர்ந்த இருவரும் பலமுறை இது மாதிரி ஆக்ரோஷமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில் விராட் கோலி, கம்பீர் வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலி ஒரு ஜாம்பவான், இது போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. விராட் மற்றும் கம்பீருக்கு இடையேயான வாக்குவாதம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீ சாந்தை கன்னத்தில் அறைந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்.

என கூறியுள்ளார்.

Tags:    

Similar News