கிரிக்கெட்

திலீப் வெங்சர்க்கார் - விராட் கோலி

null

சச்சினை போல் மீண்டு வர வேண்டும்- விராட் கோலிக்கு திலீப் வெங்சர்க்கார் அறிவுரை

Published On 2022-07-22 09:33 GMT   |   Update On 2022-07-22 10:04 GMT
  • விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை எட்ஜ் செய்து அடிக்கடி அவுட் ஆகி வருகிறார்.
  • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வைக்காதது இந்திய நிர்வாகத்தினர் எடுத்த தவறான முடிவு.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் தற்போது அதிக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கடந்த 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்த விராட் கோலி அதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் திணறி வருகிறார். அது மட்டும் இன்றி சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடர் அவருக்கு மறக்கக் கூடிய ஒரு தொடராக மாறியுள்ளது.

இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த தொடர் முடிந்ததும் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மீண்டும் ஆசிய கோப்பையின் போது அணிக்கு திரும்பவார் என்று கூறப்பட்டுள்ளது.

விராட் கோலியின் மீது ஏற்பட்டிருக்கும் இந்த விமர்சனம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியா மண்ணில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற இருப்பதால் கோலி போன்ற முக்கியமான வீரர்கள் எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியம். எந்த அளவிற்கு அதிக போட்டிகளில் அவர்களைப்போன்ற வீரர்கள் விளையாடுகிறார்களோ அந்த அளவிற்கு அவருக்கு தன்னம்பிக்கையும், பார்மும் திரும்ப கிடைக்கும்.

எனவே என்னை பொறுத்தவரை விராட் கோலி தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவரை இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வைக்காதது இந்திய நிர்வாகத்தினர் எடுத்த தவறான முடிவு.

எப்போதுமே ஒரு வீரர் தொடர்ச்சியாக ரன்களை குவிக்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதிக போட்டிகளை வழங்க வேண்டும். ஏனெனில் அதிக போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் மைதானத்தில் நின்று விளையாட முயற்சிப்பார்கள். மீண்டும் அவர்களுக்கு ரன் குவிக்க வாய்ப்பு கிடைக்கும் அதோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையும் திரும்ப கிடைக்கும்.

விராட் கோலி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை எட்ஜ் செய்து அடிக்கடி அவுட் ஆகி வருகிறார். 2003-2004 ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது சச்சின் டெண்டுல்கர் இதே மாதிரி வெளியேறினார். எனவே அந்த திசையில் ரன் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்த சச்சின் அந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் கவர் டிரைவ் விளையாடாமல் 241 ரன்கள் எடுத்து பார்முக்கு திரும்பினார்.

விராட் கோலிக்கும் அதேபோல் செய்யும் திறன் உள்ளது. எனவே அவர் அந்த பகுதியில் கடினமாக உழைத்து திறம்பட விளையாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News