கிரிக்கெட்

செல்பி எடுக்க மறுத்ததால் வாக்குவாதம்: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது ரசிகர்கள் தாக்குதல்

Published On 2023-02-16 14:13 GMT   |   Update On 2023-02-16 14:13 GMT
  • பேஸ்பால் மட்டையால் தாக்கி காரை சேதப்படுத்தியதாக பிருத்வி ஷா நண்பர் புகார் அளித்தார்.
  • பிருத்வி ஷா முதலில் தங்களை தாக்கியதாக எதிர்தரப்பினர் கூறி உள்ளனர்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை ஓஷிவாராவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பிருத்வி ஷா நேற்று தனது நண்பருடன் சாப்பிடச் சென்றபோது, இரண்டு ரசிகர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்) அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். பிருத்வி ஷா அனுமதியின் பேரில் சில புகைப்படங்கள் எடுத்த அவர்கள், தொடர்ந்து மேலும் படங்கள் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, மறுப்பு தெரிவித்த பிருத்வி ஷா, தனது நண்பர் மற்றும் ஓட்டல் மேலாளரை அழைத்து, ரசிகர்களை வெளியேற்றும்படி கூறி உள்ளார். இதனால் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பிருத்வி ஷா நண்பருடன் வெளியே வந்தபோது அவரை சிலர் பேஸ்பால் மட்டைகளுடன் ஆயுதம் ஏந்தியபடி, தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது காரையும் பேஸ்பால் மட்டையால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பிருத்வி ஷா வேறு காரில் ஏறி சென்றுள்ளார்.

நண்பரும் மற்றும் சிலரும் அவரது காரை ஓட்டிச் சென்றனர். ஆனால், அந்த காரை வாகனங்களில் துரத்தி வந்து சிலர் தாக்கியதாகவும், 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும் பிருத்வி ஷாவின் நண்பர் புகார் அளித்தார். அதன்பேரில் சப்னா கில் என்ற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட சப்னா, கைது செய்யப்பட்டார். கிரிக்கெட் வீரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்தரப்பினர் மறுத்துள்ளனர். பிருத்வி ஷா முதலில் தங்களை தாக்கியதாக அவர்கள் கூறி உள்ளனர். 

Tags:    

Similar News