கிரிக்கெட்

பனி இருக்கும் போது பந்து வீசுவது நாங்கள் சந்திக்க விரும்பிய சவால் - ரோகித் சர்மா

Published On 2023-01-19 06:16 GMT   |   Update On 2023-01-19 06:16 GMT
  • டாஸ் போடும்போது நான் சொன்னது போல் விளக்குகளின் கீழ் மற்றும் பனி இருக்கும் போது பந்து வீசுவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். இது நாங்கள் சந்திக்க விரும்பிய சவாலாகும்.
  • பந்து வீச்சில் முகமது சிராஜ் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார்.

ஐதராபாத்:

ஐதராபாத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 349 ரன் குவித்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் (208 ரன்) அடித்தார்.

பின்னர் விளையாடிய நியூசிலாந்து 131 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் பிரேஸ்வெல்-மிட்செல் சான்ட்னெர் ஜோடி சிறப்பாக விளையாடியது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேஸ்வெல் 57 பந்தில் சதம் அடித்தார். இவர்களின் ஆட்டத்தால் நியூசிலாந்து அணி ரன் இலக்கை நெருங்கியது.

இந்த ஜோடியை முகமது சிராஜ் பிரித்தார். கடைசி விக்கெட்டாக பிரேஸ்வெல் அவுட் அனார். அவர் 78 பந்தில் 140 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும். நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் 337 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிரேஸ்வெல்லின் ஆட்டம் எங்களுக்கு சவால் அளித்து விட்டது. அவர் விளையாடும்போது பேட்டுக்கு பந்து நன்றாக வந்தது. அவர்களின் முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு போட்டி எங்கள் கைக்கு வந்தது. ஆனால் பந்து வீச்சில் சறுக்கலை சந்தித்தோம்.

டாஸ் போடும்போது நான் சொன்னது போல் விளக்குகளின் கீழ் மற்றும் பனி இருக்கும் போது பந்து வீசுவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். இது நாங்கள் சந்திக்க விரும்பிய சவாலாகும்.

சுப்மன்கில் விளையாடிய விதம் அற்புதமானது. அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அதை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன். அதற்காகதான் இலங்கைக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம்.

பந்து வீச்சில் முகமது சிராஜ் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் மற்றும் 20 ஓவரில் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதில் கடினமாகவும் தெளிவாகவும் செயல்பட்டு வலிமையை அதிகரித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நியூசிலாந்து கேப்டன் டாம்லதாம் கூறும்போது, "பிரேஸ்வெல் ஆட்டம் அற்புதமானது. ஆனால் வெற்றி பெற முடியாதது ஏமாற்றத்தை அளித்தது" என்றார். 3 ஆட்டம் கொண்ட தொடரில் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 21-ந்தேதி ராய்ப்பூரில் நடக்கிறது.

Tags:    

Similar News